வத்திக்கானின் உலக ஆயர்கள் மாமன்றம். 17 அக்டோபர் 08 .
உலக ஆயர்கள் மாமன்றம் அக்டோபர் 26 வரை திருச்சபையின் வாழ்விலும் மறைப் பணியிலும் இறைவாக்கு
என்ற தலைப்பில் கருத்துப் பரிமாற்றம் செய்து வருகிறது . இவ்வாரம் வியாழக்கிழமை இயேசு
சபை என்ற துறவறச் சபையின் பெருந்தலைவர் அருள் தந்தை அடால்போ நிக்கோலாஸ் மாமன்றத்தில்
அவரது கருத்தை எழுத்து வடிவில் வெளியிட்டார். இவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர். உரோமையில்
இயேசு சபைத் தலைமையகத்தில் வாழ்கிறார் . திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் இவரை மாமன்றத்தின்
சிறப்பு உறுப்பினராக நியமித்திருந்தார். அவரது கருத்துப் பரிமாற்றத்தில் இறைவாக்கு என்பது
மிகப் பெரிய கொடை . அது புதுமையும் இளமையும் வாய்ந்தது . இறைவாக்கு நற்பயன் தர அதை எவ்வாறு
பயில வேண்டும் என்பது ஒரு முக்கியக் கேள்வி . அது ஒரு மருந்து போல மாற்றமும் குணமும்
தரும் சக்தி கொண்டது . இறைவார்த்தையின் உலகம் கடவுளின் உலகம் . கடவுளின் மகத்தான செயல்களைக்
காட்டும் உலகமது . அதைப் பயில்வோருக்கு ஆறுதலும் வெளிச்சமும் தருவது . இது மன மாற்றம்
தரும் மாமருந்து என்றால் அதை ஆசான்கள் , ஆயர்களும் குருக்களும் திறமையோடு வழங்க வேண்டும்
என அருள் தந்தை அடால்போ நிக்கோலாஸ் தம் கருத்துத்களை வெளியிட்டார் .