2008-08-26 15:48:42

இறையடியார் திருத்தந்தை முதலாம் ஜான் பவுல் மிகுந்த பணிவும் தாழ்ச்சியும் கொண்டவர்

 


ஆகஸ்ட் 26 இறையடியார் திருத்தந்தை முதலாம் ஜான் பவுல் மிகுந்த பணிவும் தாழ்ச்சியும் கொண்டவர் என்று அவரைப் பாராட்டிப் பேசினார் இத்தாலியின் வெனிஷ் பிதாப்பிதா கர்தினால் ஆஞ்செலோ ஸ்கோலா.

திருத்தந்தை முதலாம் ஜான் பவுல், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் 30 ஆம் ஆண்டையொட்டி இன்று காலை இத்தாலியின் வெனேத்தோ மாகாண ஆயர்கள் இணைந்து நிகழ்த்திய திருப்பலியில் மறையுரையாற்றிய கர்தினால் ஸ்கோலா, அத் திருத்தந்தை தமது மந்தையின் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் என்றார்.

திருத்தந்தை முதலாம் ஜான் பவுல், குடும்பம், மனித வாழ்வு, தொழிலாளர் நலன் ஓரங்கட்டப்பட்டோர் மீது அக்கறை போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்தினார் எனறுரைத்த கர்தினால் ஸ்கோலா, உண்மை, நீதி, அமைதி, நல்லிணக்கம் மக்கள் மத்தியில் ஒத்துழைப்பு ஆகியவற்றின் பாதையில் மனித சமுதாயத்தை வளர்ப்பதற்கு நாம் உழைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

வெனிஷ் பிதாப்பிதாவாக இருந்த கர்தினால் அல்பினோ லூச்சானி 1978 ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி திருச்சபையின் 263 வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தை முதலாம் ஜான் பவுல் என்ற பெயரை ஏற்ற இவர் புன்முறுவல் திருத்தந்தை என அழைக்கப்படுகிறார். இன்னும் இவர் 33 நாட்களே பாப்பிறையாகப் பணியாற்றினார்.








All the contents on this site are copyrighted ©.