2018-07-10 15:58:00

திருத்தியமைக்கப்பட்ட புலம்பெயர்ந்தவர் ஒப்பந்தம் - வரவேற்பு


ஜூலை,10,2018. புலம்பெயர்ந்தவர்கள் எந்நிலையில் இருந்தாலும், அவர்கள் அனைவரும், ஒரே மாதிரியான மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை அனுபவிப்பதற்கு வழிசெய்யப்பட வேண்டும் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

புலம்பெயர்ந்தவர்கள், பாதுகாப்பாகவும், ஒழுங்குமுறைப்படியும் ஏற்பது குறித்த ஐ.நா.வின் ஒப்பந்தம் பற்றிய ஆறாவது கலந்துரையாடல்களில் இத்திங்களன்று திருப்பீடத்தின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த, ஐ.நா.வில் திருப்பீடத்தின் நிரந்தர பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், திருத்தியமைக்கப்பட்ட புலம்பெயர்ந்தவர் ஒப்பந்தத்தை வரவேற்பதாகத் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்தவரின் பாதுகாப்பு மற்றும் அவர்களை விதிமுறைகளின்படி ஏற்பது குறித்து, மிக அண்மையில் திருத்தியமைக்கப்பட்ட ஐ.நா.வின் ஒப்பந்தம் மகிழ்வை அளிப்பதாகத் தெரிவித்த பேராயர் அவுசா அவர்கள், எந்தவிதப் பாகுபாடுமின்றி, அனைத்து நாடுகளும், அனைவரின் மனித உரிமைகளை மதித்து, பாதுகாத்து மற்றும் நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார்.

அனைத்து மனிதரும், தங்களின் சொந்த நாடுகளில், அமைதி, வளமை மற்றும் பாதுகாப்பில் வாழ்வதற்கு உரிமையைக் கொண்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்ட பேராயர் அவுசா அவர்கள், அனைவரும் புலம்பெயர, குறிப்பாக, தாங்கள் வாழ்கின்ற இடங்களில் பாதுகாப்பு உறுதிசெய்யப்படாத நிலையில், புலம்பெயர உரிமை உள்ளது எனவும் கூறினார்.  

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.