2018-07-02 16:23:00

மத்தியக் கிழக்கின் அமைதிக்காக திருத்தந்தையின் செப வேண்டுதல்


ஜூலை,02,2018. 'நீண்ட காலமாக துன்பங்களை அனுபவித்துவரும் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதிக்காக செபிக்கும் நோக்கத்தில், வரும் சனிக்கிழமையன்று ஒரு திருப்பயணியாக இத்தாலியின் பாரிக்குச் செல்லும் வேளையில், என்னோடு செபத்தில் இணைந்திருக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்' என, இஞ்ஞாயிறன்று, தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 7ம்தேதி, வரும் சனிக்கிழமையன்று, பாரி நகருக்கு ஒரு நாள் திருப்பயணத்தை மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித நிக்கொலசின் புனித பண்டங்கள் வைக்கப்பட்டிருக்கும் பாரி பசிலிக்காவுக்குச் சென்று அமைதிக்காக செபிப்பதுடன், அந்நகர் கடற்கரையின் திறந்தவெளி அரங்கில், விசுவாசிகளோடும், கிறிஸ்தவ சமூகத் தலைவர்களோடும், பிற கிறிஸ்தவ சபைகளின் முதுபெரும் தலைவர்களோடும் இணைந்து, அமைதிக்கான செபவழிபாட்டில் கலந்து கொள்வார்.

சனிக்கிழமை காலை 7 மணிக்கு வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் திருத்தந்தை, ஒன்றேகால் மணிநேர பயணத்திற்குப் பின் பாரி நகரை அடைந்து, பசிலிக்கா சந்திப்பிலும், செப வழிபாட்டிலும் கலந்து கொண்டபின்னர், உள்ளூர் நேரம் பதினொரு மணியளவில், கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களோடு, பூட்டிய அறைக்குள் கலந்துரையாடல்களை நடத்துவார்.

பின், கிறிஸ்தவ சபை தலைவர்களோடு இணைந்து, பாரி பேராயர் இல்லத்தில் மதிய உணவை அருந்தியபின், அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 5 மணி 15 நிமிடங்களுக்கு, வத்திக்கான் வந்தடைவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.