2018-06-30 15:36:00

செவ்வாய் கோளத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற காலநிலை


ஜூன்,30,2018. செவ்வாய் கோளத்தில் உயிரினங்கள் வாழத் தேவையான நீர், நிலம் மற்றும் தட்பவெப்ப நிலை உள்ளது என, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாதுரை அவர்கள், நிலவை ஆராய்ச்சி செய்ய சந்திராயன், செவ்வாயை ஆராய்ச்சி செய்ய மங்கள்யான் போன்ற செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றும், சூரியனை ஆராய்ச்சி செய்ய ஆதித்யா செயற்கைக்கோள் அனுப்பப்படவுள்ளது என்றும் அறிவித்தார். மாணவர்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருகிறோம். இதனால் உலகத் தரம்வாய்ந்த பொறியாளர்களாக அவர்கள் உருவாக முடியும் என்றும், மயில்சாமி அவர்கள் கூறினார்.

செவ்வாய், சந்திரனில் உயிரினங்கள் வாழ முடியுமா? பயிர் சாகுபடி செய்ய முடியுமா என்பது குறித்து ஆராய்ச்சி செய்யப்படுகிறது. இதில், நிலவைவிட செவ்வாய் கோளத்தில் உயிரினங்கள் வாழ அதிக வாய்ப்புள்ளது. செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்றால்போல் நீர், நிலம் மற்றும் தட்பவெப்ப நிலை உள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து தற்போது தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது என்றும், மயில்சாமி அவர்கள் கூறினார்.

ஆதாரம் : தினமலர்/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.