2018-06-23 16:21:00

மரணங்கள் இனியும் வேண்டாம், நிக்கராகுவா ஆயர்கள்


ஜூன்,23,2018. மத்திய அமெரிக்க நாடான நிக்கராகுவாவில், பதட்டநிலைகள் தொடர்ந்து நிலவி வருகின்றபோதிலும், தலத்திருஅவைத் தலைவர்கள் அந்நாட்டின் Masaya நகருக்குப் பேரணியாகச் சென்று, அமைதிக்காகச் செபித்து, அதற்காக அழைப்பு விடுத்துள்ளனர்.

நிக்கராகுவா அரசுத்தலைவர் டானியேல் ஒர்த்தேகா அவர்கள், சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத்தில் சீர்திருத்தங்களை அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 18ம் தேதி எதிர்ப்புப் போராட்டங்கள் கிளம்பின. இப்போராட்டங்கள் பரவிவந்ததையடுத்து அரசின் மாற்றங்கள் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆயினும், இப்போராட்டங்களின் ஆரம்பத்தில் பாதுகாப்புப் படைகளால் நாற்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனால் இப்போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன என செய்திகள் கூறுகின்றன.

இவ்வாரத்தில், Masaya நகரை அரசுப் படைகள் சூழ்ந்துள்ளவேளை, இப்பிரச்சனையில் இடைநிலை வகித்து, வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அழைப்பு விடுக்கும் எண்ணத்தில், அந்நாட்டின் கர்தினால் Leopoldo José Brenes, ஆயர் Silvio José Báez, திருப்பீட தூதர் பேராயர் Stanislaw Waldemar Sommertag ஆகியோர் திருநற்கருணையை ஏந்தியவண்ணம் அந்நகரில் பவனியாகச் சென்றுள்ளனர். மரணங்கள் இனியும் வேண்டாம், வன்முறையை நிறுத்துங்கள் எனவும் ஆயர்கள் கேட்டுக்கொண்டனர்

Masaya, துன்பங்களை அதிகமாக அனுபவித்த நகரம் என்று கூறிய அந்நகரைச் சேர்ந்த ஆயர் Báez அவர்கள், துன்புறும் அம்மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து அமைதிக்கு அழைப்பு விடுத்தார்.     

இவ்வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : CNA /  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.