2018-06-23 16:41:00

கைம்பெண்கள் உலக நாள், ஜூன் 23


ஜூன்,23,2018. தம்பதியரில் ஒருவரின் இழப்பு அதிகம் துன்பம் தருகின்றவேளை, அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படவும், மனித உரிமைகள் மற்றும் மனித மாண்பு மதிக்கப்படவும், பல கைம்பெண்கள் கடுமையாய்ப் போராட வேண்டியுள்ளது என்று, கைம்பெண்கள் உலக நாளுக்கென வெளியிடப்பட்ட செய்தி கூறுகின்றது.

ஜூன் 23, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட கைம்பெண்கள் உலக நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பெண்கள் அமைப்பு, கைம்பெண்களுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் எதிராக இழைக்கப்படும் கடும் மனித உரிமை மீறல்கள், இக்கால வளர்ச்சிக்குத் தடைகளாக உள்ளன என்று கூறியுள்ளது.

உலகிலுள்ள ஏறத்தாழ 25 கோடியே 80 இலட்சம் கைம்பெண்களில், பத்தில் ஒருவர் வீதம், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்கின்றனர் என்றும், அவர்களின் நல்வாழ்வுக்கு குறைந்த அளவிலே கொள்கைகள் வகுக்கப்படுகின்றன என்றும் ஐ.நா. பெண்கள் அமைப்பு இயக்குனர் Phumzile Mlambo-Ngcuka அவர்கள் கூறியுள்ளார்.    

கடும் ஏழ்மை, வன்முறை, வீடற்றநிலை, பாகுபாடு, சமூகத்தால் புறக்கணிப்பு போன்றவற்றை எதிர்கொள்ளும் இலட்சக்கணக்கான கைம்பெண்களை நினைவுகூரும் விதமாக, 2010ம் ஆண்டில் ஐ.நா.பொது அவை, ஜூன் 23ம் நாளை, கைம்பெண்கள் உலக நாளாக அறிவித்தது.

ஆதாரம் : UN /  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.