2018-06-19 16:26:00

பகைவரை மன்னித்து, செபித்து, அன்புகூர்வது கிறிஸ்தவ பண்பு


ஜூன்,19,2018. பகைவருக்காகச் செபித்து, அவர்களையும் அன்புகூர்வதே கிறிஸ்தவ பண்பு என, இச்செவ்வாய்க்கிழமை காலையில் திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாளின் நற்செய்தி வாசகமான மத்தேயு 5ம் பிரிவில் கூறப்பட்டுள்ள மன்னிப்பு, செபம் மற்றும் பகைவருக்கு அன்பு என்பது குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

நாம் மன்னிக்கப்படுவதற்கு, முதலில் நாம் பிறரை மன்னிக்க வேண்டும் என்பதை ஒரு முன்நிபந்தனையாக, இயேசு கற்பித்த செபத்திலேயே நாம் உரைக்கிறோம் என்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிறரை மன்னித்தால் மட்டும் போதாது, நாம் அவர்களுக்காகச் செபிக்கவும் வேண்டுமென இயேசு விரும்புகிறார் என மேலும் கூறினார்.

எதிரிகளை மன்னிப்பது எளிதாகத் தெரிந்தாலும், அவர்களுக்காகச் செபிப்பது என்பது அவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடியதல்ல எனக் கூறிய திருத்தந்தை, கிறிஸ்தவர்களால் அது எளிதாகப் புரிந்துகொள்ள முடியும், ஏனெனில் கிறிஸ்துவும் தன்னை சிலுவையில் அறைந்தவர்களை மன்னிக்கும்படியாக, சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போதே இறைவனிடம் வேண்டினார் என்றார்.

சைபீரியா உறைபனியில் சாகும்படியாக அனுப்பப்பட்ட இரஷ்ய கிறிஸ்தவர்களும், ஆஷ்விட்ஸ் வதைப்போர் முகாம்களில் கொல்லப்பட்ட மக்களும் எப்படி தங்கள் ஆட்சியாளர்களுக்காக செபித்திருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொடுங்கோல் ஆட்சிபுரிந்த தங்கள் தலைவர்களுக்காக, தங்கள் மரணவேளையிலும் இந்த கிறிஸ்தவர்கள் செபித்தது உண்மை, இவர்களிடமிருந்து, மன்னிப்பதையும் பகைவருக்காகச் செபிப்பதையும் நாம் கற்றுக்கொள்ளமுடியும் என்றார்.

இயேசு மன்னித்ததையும், தூய ஸ்தேவான் மன்னித்ததையும் விவிலியத்தில் காணும் நாம், எத்தனை சூழல்களில் நாம் மன்னிக்காமல் செயல்பட்டிருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பகைவரை மன்னிப்பது, அவர்களுக்காகச் செபிப்பது, அவர்களை அன்புகூர்வது போன்றவைகளை இயேசுவே நமக்குத் தெளிவாக விளக்குகிறார் என மேலும் கூறினார். 

இறைத்தந்தை நிறைவுள்ளவராக இருப்பதுபோல், நாமும் இருக்க வேண்டும் என்பதற்காக இறையருளை வேண்டுவோம் என உரைத்து, தன் மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.