2018-06-19 16:53:00

15வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் Instrumentum laboris


ஜூன்,19,2018. “இளையோர், விசுவாசம் மற்றும் அழைப்பைத் தேர்ந்து தெளிதல்” என்ற தலைப்பில், வருகிற அக்டோபர் 3ம் தேதி முதல், 28ம் தேதி வரை, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 15வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான Instrumentum laboris எனப்படும் வரைவு தொகுப்பு இச்செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலர் கர்தினால் லொரென்சோ பால்திசேரி அவர்கள் தலைமையிலான குழு, 67 பக்கம் கொண்ட இந்த தொகுப்பை வெளியிட்டது.

உலகில், 16 முதல், 29 வயதுக்குட்பட்ட இளையோர் 180 கோடி என்றும், இவர்கள், மொத்த மனித சமுதாயத்தில் நான்கில் ஒரு பகுதியினர் என்றும், இந்த இளையோர் எதிர்கொள்ளும் இன்னல்கள், அவர்களின் நம்பிக்கைகள் போன்ற பல தலைப்புகள், இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன என்றும் கூறப்பட்டது.

15வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துரையாடலுக்குப் பயன்படுத்தப்படும் இந்த தொகுப்பு, ஏற்றகொள்தல், விளக்குதல், தேர்ந்தெடுத்தல் ஆகிய மூன்று தலைப்புகளாக அமைக்கப்பட்டு, இளையோரின் நிதர்சனமான வாழ்வு பற்றிப் புரிந்துகொள்வதற்கு கருத்துக்களை வழங்கியுள்ளது. இணையதளத்தில் வெளியிடப்பட்ட கேள்விகளுக்கு. ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட இளையோர் அளித்த பதில்கள் உட்பட, பல்வேறு தரப்புகளிலிருந்து சேகரிக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் இந்த தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

திருஅவையிடமிருந்து இன்று இளையோர் எதிர்பார்ப்பது என்ன? எல்லாவற்றுக்கும் மேலாக, திருஅவையில் அவர்கள் தேடுவது என்ன?  என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ள இளையோர், எடுத்துக்காட்டான, திறமையான, பொறுப்புள்ள, மற்றும் கலாச்சார உறுதியுடன் ஒளிர்கின்ற, போதிப்பதைவிட நற்செய்தியின் ஒளியில் வாழ்வுச்சூழலைப் பகிர்ந்துகொள்கின்ற, ஒளிவுமறைவற்ற, வரவேற்கின்ற, நேர்மையான, ஈர்ப்பு சக்திகொண்ட, எளிதில் அணுகக்கூடிய, மகிழ்வான, கலந்துரையாடுகின்ற, ஓர் உண்மையான திருஅவையை எதிர்பார்க்கின்றனர்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், அமைப்புமுறை கட்டுப்பாடுகள் குறைந்த, முற்சார்பற்று வரவேற்கும் திறன்கொண்ட, நண்பனாக, அயலவனாக, இரக்கமுள்ளதாக, மனிதர் முறைகேடாகப் பயன்படுத்தப்படும்போது அதை சிறிதும் சகித்துக்கொள்ளாத.... திருஅவையை இளையோர் எதிர்பார்க்கின்றனர். திருஅவையிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத இளையோரும் உள்ளனர் எனவும் செய்தியாளர் கூட்டத்தில் கூறப்பட்டது.

Instrumentum laboris தொகுப்பில், செவிமடுத்தல், உடன்செல்தல், மனம்மாறுதல், தேர்ந்துதெளிதல், சவால்கள், அழைப்பு, புனிதத்துவம் ஆகிய ஏழு தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

உலக ஆயர்கள் மாமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்கென பயன்படுத்தப்படும் Instrumentum laboris எனப்படும் தொகுப்பு, 1974ம் ஆண்டில், நற்செய்தி அறிவிப்பு பற்றி நடைபெற்ற உலக ஆயர்கள் மாமன்றத்திற்கென முதன்முதலில் தயாரிக்கப்பட்டது.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.