2018-06-15 16:22:00

கத்தோலிக்கப் பள்ளிகளில் அரசியலமைப்பு கற்றுக்கொடுக்கப்பட..


ஜூன்,15,2018. இந்தியாவில் அனைத்து கத்தோலிக்கப் பள்ளிகளும், மாணவர்களுக்கு, நாட்டின் சமயச்சார்பற்ற அரசியலமைப்பு பற்றி கற்றுக்கொடுக்க வேண்டுமென, இந்திய ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சார பணிக்குழு அலுவலகம் அறிவித்துள்ளது.

ஜூன் 11, இத்திங்களன்று ஒரு மாதிரிபடிவத்தை வெளியிட்டுள்ள இந்த அலுவலகம், இந்தியாவில், இந்த ஜூன், ஜூலை மாதங்களில் கல்வியாண்டைத் தொடங்கும் அனைத்து கத்தோலிக்கப் பள்ளிகளும், இந்தக் கல்வியாண்டில் இந்த மாதிரிபடிவத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

திருஅவை தலைவர்கள், வத்திக்கானின் கட்டளையின்பேரில், மனித உரிமைகள் மற்றும் சமயச்சார்பற்ற தன்மையை ஊக்குவித்து, நாட்டின் உறுதியான தன்மையை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என, இந்து தீவிரவாதக் குழுக்கள் குறைகூறிவரும்வேளை, இந்திய ஆயர் பேரவையின் கல்வி மற்றும் கலாச்சார பணிக்குழு அலுவலகம் இம்முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கை பற்றி செய்தியாளர்களிடம் பேசிய, இந்த பணிக்குழுவின் தலைவராகிய, கொல்கத்தா பேராயர் தாமஸ் டிசூசா அவர்கள், முதல் கட்டமாக, இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் கவனத்தைச் செலுத்த தீர்மானித்துள்ளோம் என்று கூறினார்.

நாம் இந்திய மக்கள் எனத் தொடங்கும் அரசியலமைப்பின் முகப்புரையில், நாட்டின் இறையாண்மை, பொதுவுடமை, சமயச்சார்பின்மை, சனநாயக குடியரசு என்று உள்ளது. இதில், அனைத்துக் குடிமக்களுக்கும், சமூகப் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் அரசியல் நீதி, எண்ணம், கருத்து, மதம் ஆகியவற்றில் சுதந்திரம், சமத்துவம், மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : UCAN /  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.