2018-06-12 15:37:00

சிறாரின் மகிழ்ச்சிநிறை வாழ்வை ஒடுக்க நினைப்பவர்களுக்கு...


ஜூன்,12,2018. உலக சிறார் தொழில் எதிர்ப்பு தினம் இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, அது குறித்து டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'சிறார் கல்விகற்கவும், விளையாடவும், அமைதியான சூழலில் வளரவும் இயலக்கூடியதாக இருக்க வேண்டும். வருங்காலம் குறித்த குழந்தைகளின் மகிழ்ச்சியுடன்கூடிய உற்சாகத்தை ஒடுக்க நினைப்பவர்களுக்கு ஐயோ கேடு' என திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி உரைக்கிறது.

மேலும், திருப்பீட சீர்திருத்தத்தில், திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் சி9 கர்தினால்கள் ஆலோசனை அவையினரையும், இச்செவ்வாயன்று  திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ். இன்னும், ஜெர்மனியின் பெர்லின் நகரில், Neocatechumenal Way என்ற பக்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நாற்பதாம் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு செய்தி ஒன்றை அனுப்பினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கலைஞரும், மறைக்கல்வி போதகரும், Neocatechumenal Way இயக்கத்தின் துணை நிறுவனருமான Kiko Argüello என்பவர் இயற்றிய, அப்பாவிகளின் துன்பங்கள் என்ற தலைப்பை மையப்படுத்தி, திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இச்செய்தியை அனுப்பினார் 

யூதஇன ஒழிப்பு நடவடிக்கையில் பலியானவர்களை மறக்கவேண்டாம் என, அச்செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Neocatechumenal Way எனப்படும் பக்த இயக்கம், தொடக்ககால கிறிஸ்தவர்களின் வாழ்வுமுறையால் தூண்டப்பட்டு, 1964ம் ஆண்டில் இஸ்பெயினில் ஆரம்பிக்கப்பட்டது. கத்தோலிக்க பங்குத்தளங்களில் செயல்படும் இந்த இயக்கத்தில், உலகெங்கும் ஏறத்தாழ நாற்பதாயிரம் சிறிய குழுக்கள் உள்ளன. மொத்தத்தில், உலகெங்கும் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.