2018-06-12 16:03:00

2018ல் இதுவரை 18 அருள்பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்


ஜூன்,12,2018. 2018ம் ஆண்டு தொடங்கியதிலிருந்து, உலகில் 18 கத்தோலிக்க அருள்பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என ஆசியச் செய்தி கூறியுள்ளது.

2010 மற்றும் 2013ம் ஆண்டுகள் மிகவும் கொடுமையான ஆண்டுகளாய் இருந்ததெனவும், 2010ம் ஆண்டில் 19 அருள்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளது உட்பட, கடந்த எட்டு ஆண்டுகளில், உலகில் 125 அருள்பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் கூறுகிறது அச்செய்தி.

ஜூன் 10, இஞ்ஞாயிறன்று, பிலிப்பீன்ஸ் நாட்டின் Cabanatuan மறைமாவட்டத்தில், அருள்பணியாளர் Richmond Nilo என்பவர் Mayamot ஆலயத்தில் திருப்பலியைத் தொடங்கவிருந்த நேரத்தில், இனம் தெரியாத மனிதர்கள், அவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

இக்கொலை குறித்து ஆசியச் செய்தியிடம் பேசிய வெளிநாட்டு பாப்பிறை மறைப்பணி சபையின் அருள்பணி Giovanni Re அவர்கள், எவ்வித அச்சுறுத்தல் வந்தாலும், தங்களின் மறைப்பணியைத் தொடர்ந்து ஆற்றுவோம் எனக் கூறியுள்ளார்.

பிலிப்பீன்ஸ் நாட்டில், 2017ம் ஆண்டு டிசம்பரிலிருந்து இதுவரை மூன்று அருள்பணியாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.