2018-06-05 15:21:00

திருத்தந்தை - கடவுளின் படைப்புக்காக நன்றி சொல்வோம்


ஜூன்,05,2018. கடவுளின் படைப்பை நினைத்து, அவரைப் புகழ்ந்து, அவருக்கு நன்றியுள்ள பிள்ளைகளாக வாழுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று தன் டுவிட்டரில் எல்லாரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 05, இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “ஆண்டவரே, நாங்கள் வாழும் இந்தப் பூமிக்காகவும், நீர் படைத்த எல்லாவற்றுக்காகவும், உம்மைப் புகழ்ந்து நன்றி கூறும் உணர்வை, எம்மில் எழுப்பியருளும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உலக சுற்றுச்சூழல் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், பெருங்கடலில் மிதக்கின்ற பிளாஸ்டிக் துகள்கள், நம் வான்வெளியிலுள்ள விண்மீன்களைவிட அதிகமாக உள்ளன என்று சொல்லி, பிளாஸ்டிக் மாசுகேட்டை ஒழிக்க உலகினர் அனைவரும் முயற்சிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், எண்பது இலட்சம் டன்களுக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் பெருங்கடல்களைச் சென்றடைகின்றன என்றும், இந்நிலை நீடித்தால், 2050ம் ஆண்டுக்குள், நம் பெருங்கடல்களில், மீன்களைவிட பிளாஸ்டிக் கழிவுகளே அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார், கூட்டேரெஸ்.

நம் ஒரே இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதற்கு நம் எல்லாருக்கும் முக்கியமான பங்கு உள்ளது என்றும், வளமையான மற்றும் அமைதியான வருங்காலத்திற்கு, சுற்றுச்சூழல் மாசடையாத நலமான புவி இன்றியமையாதது என்றும், ஐ.நா. பொதுச்செயலரின் செய்தி கூறுகின்றது.

பிளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட, பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை நிறுத்துமாறும், மறுமுறையும் பயன்படுத்த முடியாத அவற்றைத் தவிர்க்குமாறும், கேட்டுக்கொண்டுள்ளார், ஐ.நா. பொதுச்செயலர் கூட்டேரெஸ்.

1974ம் ஆண்டில், உலக சுற்றுச்சூழல் தினம் முதன்முறையாகச் சிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு சிறப்பிப்பதன் வழியாக, ஓசோன் வாயுமண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை, நிலம் பாலைநிலமாகி வருதல், உலக அளவில் வெப்பநிலை அதிகரிப்பு போன்ற உலகளாவிய சுற்றுச்சூழல் குறித்த விவகாரங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அரசியல் ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் தூண்டப்படுகின்றது.   

மேலும், தமிழகத்தில் 2019ம் ஆண்டு சனவரி முதல் தேதியிலிருந்து, பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டிற்கும், உற்பத்திக்கும் தடை விதிக்கப்படுவதாக, முதல்வர் பழனிசாமி அவர்கள் சட்டசபையில் அறிவித்துள்ளார்.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.