2018-06-05 16:02:00

இந்தியாவில் வறுமை ஒழிப்பு பற்றி கோவா பேராயர்


ஜூன்,05,2018. இந்தியாவில் நிலவும் வறுமையின் பல்வேறு வடிவங்கள் களையப்பட வேண்டியதன் அவசியத்தை, 2018-2019ம் ஆண்டு மேய்ப்புப்பணி அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார், கோவா பேராயர் Filipe Neri Ferrao.

இத்திங்களன்று வெளியான இவ்வறிக்கையில், வறுமையின் பல்வேறு வடிவங்களை, பொருளாதார, சமூக மற்றும் ஆன்மீக அளவில் எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து விளக்கியுள்ளார், பேராயர் Ferrao.

இந்தியாவில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தல்களுக்காக நோன்பிருந்து செபிக்குமாறு, அண்மையில் கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்ட டெல்லி பேராயர் அனில் கூட்டோ அவர்களின் அறிக்கையோடு, கோவா பேராயரின் இந்த அறிக்கையையும் ஒப்பிட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இதையொட்டி ஆசியச் செய்தியிடம் பேசிய, பேராயரின் செயலர் அருள்பணி Loila Pereira அவர்கள், 15 பக்கங்கள் கொண்ட இந்த மேய்ப்புப்பணி அறிக்கை, வறுமையை அகற்றுவது பற்றிப் பேசுகின்றது என்றும், 15 பக்கங்களில் இருந்த ஒரு கூற்று, அந்த அறிக்கையை, அரசியலமைப்பு பற்றியதாக ஆக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், மனித உரிமைகள் நசுக்கப்பட்டு, அரசியலமைப்பு ஆபத்தில் இருக்கின்றவேளை, கத்தோலிக்கர் அரசியலில் உயிரூட்டமுடன் பங்கெடுக்குமாறு, கோவா பேராயர் Filipe Neri Ferrao அவர்கள் வலியுறுத்தியுள்ளர் என செய்திகள் கூறுகின்றன.

சாப்பிடுவது, உடை உடுத்துவது,  வாழ்வது,  ஏன் வழிபடுவது போன்ற எல்லாவற்றிலும், ஒருவர் எவ்வாறு மற்றும், என்ன மாதிரி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும், ஒரு புதிய கலாச்சாரம், மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தலை முன்வைக்கின்றது என, பேராயர் Ferrao அவர்கள் மேலும் கூறியுள்ளார். கோவா தலத்திருஅவையிலுள்ள கத்தோலிக்கர், சமூக இயக்கங்களில் உயிர்த்துடிப்புடன் கலந்துகொள்ளவும், அரசியலில் செயலூக்கத்துடன் பங்கெடுக்கவும் வேண்டுமென, இத்திங்களன்று வெளியான மேய்ப்புப்பணி அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார், கோவா பேராயர்.

இன்று நம் அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளதால், பெருமளவான மக்கள், பாதுகாப்பின்றி வாழ்ந்து வருகின்றனர் எனவும், நாட்டின் பொதுத்தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கையில், நம் அரசியலமைப்பை மேலும் நன்றாக அறிந்து, அதனைப் பாதுகாப்பதற்காக கடினமாக உழைக்க வேண்டுமென கூறியுள்ளார், பேராயர் Ferrao.

இந்தியாவில் பல்வேறு சிறுபான்மையினர் தங்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்வதாகவும், நாட்டில், சட்டத்தை மதித்தல் குறைந்து வருகின்றது என்றும் கூறியுள்ள கோவா பேராயர், மனித உரிமைகள் தாக்கப்பட்டு வருகின்றன மற்றும் சனநாயகம் ஆபத்தில் இருப்பதுபோல் தோன்றுகின்றது எனவும் கூறியுள்ளார்.

கோவா மாநிலத்தின் ஏறத்தாழ 15 இலட்சம் மக்களில், 26 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்.

ஆதாரம் : AsiaNews / UCAN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.