2018-06-04 16:52:00

நிகராகுவா கர்தினால் ஒபாந்தோ பிராவோ மரணம்


 

ஜூன்,04,2018. நிகராகுவா நாட்டை ஏறத்தாழ 44 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி செய்த Somoza குடும்ப அடக்குமுறைகளுக்கு எதிராகவும், மக்களின் மனித உரிமைகள் காக்கப்படுவதற்காகவும் வெளிப்படையாய் குரல் எழுப்பிய அந்நாட்டு கர்தினால் மிகுவேல் ஒபாந்தோ பிராவோ (Miguel Obando y Bravo) அவர்கள், தனது 92வது வயதில், ஜூன் 3, இஞ்ஞாயிறன்று காலமானார்.

Sandinista அமைப்பினருக்காகக் குரல் கொடுத்த கர்தினால் ஒபாந்தோ பிராவோ அவர்கள், சாமோசா சர்வாதிகார ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர், 1979ம் ஆண்டில் சான்டனிஸ்டா ஆட்சிக்கு வந்ததும், நாட்டில் அமைதி ஏற்படுவதற்காக, சான்டனிஸ்டா அரசுக்கும், சாமோசா குடும்பத்திற்கும் இடையே இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தைகளில் இடைநிலை வகித்தவர்.

மறைந்த கர்தினால் அவர்களின் ஆன்மா நிறைசாந்தியடைய செபிப்பதாக, மானகுவா பேராயர், கர்தினால் LEOPOLDO JOSÉ BRENES SOLÓRZANO அவர்களுக்கு,  தந்திச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினாலின் இறப்பால் வருந்தும் அந்நாட்டினருக்கு தனது ஆறுதலையும் செபங்களையும் தெரிவித்துள்ளார்.

கர்தினால் அவர்கள், திருஅவைக்கு ஆற்றிய அயரா சேவைக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கர்தினால் ஒபாந்தோ பிராவோ அவர்களின் இறப்போடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 212 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடையவர்களின் எண்ணிக்கை 115 ஆகவும்  மாறியுள்ளன.

சலேசிய சபையைச் சேர்ந்த, நிகராகுவா தலைநகர் மானாகுவா முன்னாள் பேராயரான, கர்தினால் ஒபாந்தோ பிராவோ அவர்கள், நிகராகுவா ஆயர் பேரவைத் தலைவராக ஆறுமுறைகள் இருந்துள்ளார். இவர், இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் பேரவையின் சமய விவகாரத்துறை தலைவராகவும், மத்திய அமெரிக்கா மற்றும் பானமா ஆயர் பேரவை செயலகத்தின் தலைவராகவும் பணியாற்றி இருக்கின்றார்.

1985ம் ஆண்டு மே 25ம் தேதி புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் கர்தினலாக உயர்த்தப்பட்டார், மறைந்த கர்தினால் ஒபாந்தோ பிராவோ.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.