2018-05-23 16:50:00

இமயமாகும் இளமை:தாய்க்கு சிறுநீரக தானம் அளிக்க மகனின் பொய்


பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இம்ரான் நஜீப் (34) என்பவர், தன் ஆறு குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தினருடன் பிரிட்டன் தலைநகர் இலண்டனில் வாழ்ந்து வருகிறார். இவரது தாய் ஜைனப் பேகத்துக்கு, திடீரென சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, நாள்தோறும் அவருக்கு டயாலசிஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடனடியாக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இவரது மகன் இம்ரான் நஜீப் தனது சிறுநீரகத்தை அளிக்க முன்வந்துள்ளார். ஆனால், தாய் ஜைனப் பேகம் ஏற்க மறுத்துவிட்டார். எனினும் அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பில், ஏற்கெனவே தனது சிறுநீரகத்தை விற்றுவிட்டதாகவும், தற்போது இணையதளத்தில் அது ஏலம் விடப்பட்டிருப்பதாகவும் இம்ரான் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டதும் "முன்பின் அறியாதவருக்கு அளிப்பதைவிட, எனக்கே அந்த சிறுநீரகத்தை அளித்துவிடு" என தாய் ஜைனப் பேகம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தாயின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இம்ரான் தெரிவித்த சாமர்த்தியமான பொய் தற்போது உலகம் முழுவதும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.