2018-05-15 16:01:00

இந்திய பொதுத் தேர்தல்களுக்காக ஓராண்டு செபம்


மே,15,2018. இந்தியாவின் சனநாயகத்தை அச்சுறுத்தும் ஒரு குழப்பமான அரசியல் வருங்காலத்தை நாடு எதிர்நோக்கும்வேளை, அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல்களுக்காக ஓராண்டு செப முயற்சியை ஊக்குவித்துள்ளார், டெல்லி பேராயர் அனில் கூட்டோ.

மே 13, இஞ்ஞாயிறன்று, டெல்லி உயர்மறைமாவட்டத்தின் அனைத்து பங்கு ஆலயங்களிலும் வாசிக்கப்பட்ட மேய்ப்புப்பணி அறிக்கையில், 2019ம் ஆண்டு ஏப்ரலில் நடைபெறுவதாய் திட்டமிடப்பட்டுள்ள தேர்தல்களுக்காக, விசுவாசிகள் எல்லாரும் செபம் செய்யவும், வெள்ளிக்கிழமைகளில் நோன்பிருக்கவும் கேட்டுக்கொண்டுள்ளார், பேராயர் அனில் கூட்டோ.

2019ம் ஆண்டு தேர்தல்களின் பயனாக, நாம் புதிய அரசைப் பெறுவதற்கு, போர்த்துக்கல் நாட்டின் பாத்திமாவில் அன்னை மரியா காட்சியளித்த நினைவு நாளான மே 13ம் தேதியிலிருந்து, ஓராண்டு செபத்தைத் தொடங்குவோம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார், பேராயர் அனில் கூட்டோ.

இந்துத்துவ ஆதரவு பாரதிய ஜனதா கட்சியின் ஐந்து ஆண்டு கால அரசு, 2019ம் ஆண்டு மே மாதத்தில் நிறைவடைகின்றது.

பிரதமர் மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், 2017ம் ஆண்டில் கிறிஸ்தவர்க்கெதிராக 736 தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வெண்ணிக்கை, 2016ம் ஆண்டில் 348 என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.