2018-05-08 15:48:00

தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனையைக் களைய உலகளாவிய முயற்சிகள்


மே,08,2018. உலகில் நிலவும் மாறுபட்ட காலநிலையால், ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான டாலர் பணம் இழக்கப்படுகின்றது என்றும், 2050ம் ஆண்டுக்குள், உலகில், நான்கு பேருக்கு ஒருவர் வீதம், கடும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் வாழ்வார்கள் என்றும், ஐ.நா. வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது.

நீர் வளங்களைப் பேணி பாதுகாப்பது குறித்து, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில், மே 07, இத்திங்களன்று தொடங்கியுள்ள, மூன்று நாள் ஐ.நா. கூட்டம் குறித்து, WMO எனப்படும், உலக வானிலை ஆய்வு நிறுவனத்தின் தண்ணீர் துறையின் தலைவர் Harry Lins அவர்கள், செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

தண்ணீர் விநியோகம் மற்றும் தண்ணீர் நிர்வாகம் குறித்து, புரிந்துணர்வு குறைவதால், தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனை மேலும் சிக்கலாக மாறுகின்றது என்றும், Lins அவர்கள் தெரிவித்தார்.

உலகில் ஒரு பக்கம் பஞ்சமும், மறுபக்கம் வெள்ளமும் மிகவும் கடுமையாய் மக்களைப் பாதிக்கின்றவேளை, நீர்வள ஆதாரங்களைத் திறமையாய் நிர்வகிக்க வேண்டியது இன்றியமையாதது என்று, WMO நிறுவனத்தின் பொதுச் செயலர், Petteri Taalas அவர்கள் கூறினார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.