2018-05-03 15:07:00

அருளாளர்களை புனிதர்களாக்க கூடிவரும் கர்தினால்கள் அவை


மே.03,2018. அருளாளர்கள் சிலரை புனிதர்களாக உயர்த்தும் ஒப்புதலை வழங்க, மே 19, சனிக்கிழமை, காலை 10 மணிக்கு, கர்தினால்களின் அவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில், திருப்பீடத்தில் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அருளாளர்களான திருத்தந்தை 6ம் பால், சான் சால்வதோர் பேராயர், ஆஸ்கர் ரொமேரோ, திருநற்கருணையை ஆராதிப்போர் சபையை நிறுவிய அருள்பணி பிரான்செஸ்கோ ஸ்பினெல்லி, மறைமாவட்ட அருள்பணியாளர், வின்சென்சோ ரொமானோ, இயேசு கிறிஸ்துவின் எளிய பணியாளர்கள் சபையை நிறுவிய மரிய கத்தரீனா காஸ்பெர், மற்றும் திருஅவையின் மறைப்பணி சகோதரிகள் சபையை நிறுவிய நசரியா இஞ்ஞாசியா ஆகியோரை புனிதர்களாக உயர்த்தும் ஒப்புதல் குறித்து இக்கூட்டத்தில் வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மே 20, ஞாயிற்றுக்கிழமை, தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவைச் சிறப்பிக்கும் வண்ணம், காலை 10 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலியை தலைமையேற்று நடத்துவார் என்று, திருப்பீட திருவழிபாட்டுத் துறை அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.