2018-04-30 15:36:00

திராட்சைச் செடியோடு இணைந்திருந்து பலன் தருவோம்


ஏப்.30,2018. திராட்சைச் செடியோடு இணைந்திருக்கும் கொடிகளே பலன் தரும் என்பது கிறிஸ்தவ வாழ்வின் இரகசியம் என இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'இயேசுவே உண்மையான திராட்சைச் செடி' என்ற இஞ்ஞாயிறு வாசகம் குறித்து தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் என்றும் இறைவனில் இணைந்திருந்து, பலன் தருபவர்களாக இருக்கவேண்டும் என இயேசு விரும்புகிறார் என்றார்.

நமக்குரிய பாதுகாப்பான இடங்களை விட்டு வெளியே வந்து, மற்றவர்களின் தேவைகளுக்கு செவிசாய்ப்பவர்களாக மாறி, கிறிஸ்தவ சாட்சியமாக இவ்வுலகிற்கு விளங்க வேண்டிய அவசியத்தை தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் கிறிஸ்துவுடன் இணைந்திருப்பதால் நாம் அடையும் முக்கிய கனி, அடுத்தவருக்கு ஆற்றும் பிறரன்பு பணியாகும் என்றார்.

நாம் இறைவனோடு இணைந்திருப்பதால் ஒரு புதிய வாழ்வைப் பெறுகிறோம், அந்த புதிய வாழ்வு என்பது, இயேசுவின் உயிர்ப்பில் கிட்டும் இரக்கம், நீதி, அமைதி ஆகியவற்றை உள்ளடக்கியது என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.