2018-04-18 15:07:00

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒரே கடவுளின் குடும்பத்தினர்


ஏப்.18,2018. ஒவ்வொரு ஆணும், பெண்ணும், இளையோரும், முதியோரும் உரையாடலையும், சந்திக்கும் கலாச்சாரத்தையும் வளர்க்க அழைக்கப்பட்டுள்ளார் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

சவுதி அரேபியா நாட்டில், ஏப்ரல் 14, கடந்த சனிக்கிழமை முதல், வரும் வெள்ளிக்கிழமை வரை பயணம் மேற்கொண்டிருக்கும் பல் சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran அவர்கள், ரியாத் நகரில் இஞ்ஞாயிறன்று நிறைவேற்றிய திருப்பலியில் இவ்வாறு மறையுரை வழங்கினார்.

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒரே கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பல நூற்றாண்டுகளாக இவ்விரு சமயத்தவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்திருப்பதாகவும் கர்தினால் Tauran அவர்கள், தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார்.

நேர்மை, அடுத்தவருக்குச் செவிமடுத்தல், விருந்தோம்பல் என்ற பல உயரிய பண்புகளைக் கொண்டுள்ள இவ்விரு மதத்தினரும், அறிவு சார்ந்த முறையிலும், தொழில் சார்ந்த முறையிலும் ஒருவருக்கொருவர் துணையாக வாழவேண்டும் என்று கர்தினால் Tauran அவர்கள், தன் மறையுரையில் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.