2018-04-16 16:24:00

சிரியாவின் இன்றைய நிலைகள் குறித்து திருத்தந்தை மீண்டும் கவலை


ஏப்.,16,2018. அமைதிக்கான நல்வழிமுறைகள் அனைத்துலக சமூகத்தில் இருக்கின்றபோதிலும்,  சிரியா மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் பிரச்சனைகள் தொடர்வது குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக, தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப்பின் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அமைதிக்காக தான் செபிக்கும் அதேவேளையில், நல்மனம் கொண்டோரின் செபத்திற்கும், அரசு பொறுப்பிலுள்ளோரின் அமைதிக்கான உறுதிப்பாட்டிற்கும்,  தான் விண்ணப்பிப்பதாக, தான் ஞாயிறு விடுத்திருந்த அதே விண்ணப்பத்தை, வாழ்த்தொலி உரைக்குப் பின்னரும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

மேலும், பல காலமாக தொடர்ந்து மருத்துவக் கருவிகளின் உதவியுடனேயே வாழ்ந்துவரும் இங்கிலாந்தின் குழந்தை, ஆல்ஃபி ஈவான்ஸ், மற்றும், பிரான்சின் வின்சென்ட் லேம்பர்ட்  ஆகிய இருவருக்காகவும் செபிக்குமாறு விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு நோயாளியும் அவரவருக்குரிய மாண்புடனும், வாழ்வுக்குரிய மதிப்புடனும் நடத்தப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் திருத்தந்தை முன்வைத்தார்.

மேலும், ஈக்குவதோர் மற்றும் கொலம்பியாவிற்கு இடையிலிலுள்ள எல்லையில் கடந்த  மார்ச் மாத இறுதியில் கடத்திச் செல்லப்பட்ட மூன்று பேர் தற்போது கொலைச் செய்யப்பட்டுள்ளது குறித்தும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இறந்தோருக்காக செபிப்பதாக உறுதி கூறியுள்ளதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலையும் வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.