2018-04-12 14:41:00

புலம்பெயர்ந்தோரை வரவேற்பது எல்லைப் பாதுகாப்பிற்கு முரணல்ல


ஏப்.12,2018. நாடுகளின் எல்லைகளைப் பாதுகாப்பதும், புலம்பெயர்ந்தோரை வரவேற்பதும் ஒன்றுக்கொன்று முரணானது என்று கூறுவோரின் கருத்தை திருஅவை ஏற்காது என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் பன்னாட்டு அவையில் உரையாற்றினார்.

புலம்பெயர்ந்தோர் குறித்த உலகளாவிய ஒப்பந்தம் என்ற தலைப்பில் ஜெனீவாவில் நடைபெற்றுவரும் கூட்டத்தில், ஜெனீவா ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் ஈவான் யுர்க்கோவிச் அவர்கள், ஏப்ரல் 10, இச்செவ்வாயன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

தஞ்சம் கோரி பிற நாடுகளில் நுழையும் புலம்பெயர்ந்தோருக்கு நலப்பராமரிப்பு வழங்குவதில் எவ்வித பாகுபாடும் காட்டாமல் செயலாற்றுவது அரசின் கடமை என்பதை திருப்பீடம் வலியுறுத்தி வருகிறது என்ற கருத்தையும், பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் தன் உரையில் முன்வைத்தார்.

தஞ்சம் புகுந்த நாட்டின் மொழியைக் கற்று, அந்நாட்டின் கலாச்சாரத்தையும், சட்டங்களையும் மதித்து வாழ்வது, புலம்பெயர்ந்தோரின் கடமை என்பதையும் பேராயர் யுர்க்கோவிச் அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.