2018-04-12 15:44:00

பாப்புவா நியூ கினி நாட்டில் கர்தினால் பரோலின்


ஏப்.12,2018. பாப்புவா நியூ கினி மக்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீது கொண்டுள்ள அன்பையும், மதிப்பையும் தான் நேரில் உணர்ந்துள்ளதாகவும் திருத்தந்தையும், அம்மக்களுடன் உள்ளத்தால் ஒன்றித்திருக்கிறார் என்றும் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.

ஏப்ரல் 11, இப்புதன் முதல், 18 வருகிற புதன் முடிய, பாப்புவா நியூ கினி நாட்டில் நடைபெறும் ஆயர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள அங்கு சென்றுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், அதிகாலை மூன்று மணியளவில், தன்னை விமான நிலையத்தில் வரவேற்க, 300க்கும் அதிகமான மக்கள் கூடியிருந்தது, தன் உள்ளத்தைத் தொட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா, நியூ சிலாந்து, பசிபிக் தீவுகள், பாப்புவா நியூ கினி நாடுகளைச் சேர்ந்த 75 ஆயர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'இறைவா உமக்குப் புகழ்' என்ற திருமடலை மையப்படுத்தி, Port Moresby என்ற நகரில் மேற்கொண்டுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள, கர்தினால் பரோலின் அவர்கள் அங்கு சென்றுள்ளார் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

"ஓசியானியா பகுதியின் பொதுவான இல்லம்: கடலைப்போல பரந்துள்ள வாய்ப்புக்கள்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுக்காக்க தலத் திருஅவைகள் ஆற்றவேண்டிய பணிகள் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.