2018-04-06 15:35:00

புனித வாழ்வு பற்றிய புதிய திருத்தூது அறிவுரை ஏப்ரல் 09


ஏப்.06,2018. இன்றைய உலகில் புனிதத்தன்மையுடன் வாழ்வதற்கு அழைப்பு விடுத்து, “Gaudete et exsultate” அதாவது, ‘அக்களியுங்கள் அகமகிழுங்கள்’ என்ற தலைப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள, ஒரு திருத்தூது அறிவுரை, ஏப்ரல், 09, வருகிற திங்கள் பகல் 12.15 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

உரோம், புனித ஜான் இலாத்தரன் பசிலிக்காவின் முதன்மைக் குருவும், உரோம் மறைமாவட்டத்தின் திருத்தந்தையின் பிரதிநிதியுமான பேராயர் ஆஞ்சலோ தெ தொனாத்திஸ் அவர்கள், திருத்தந்தையின் இந்த திருத்தூது அறிவுரையை வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“Gaudete et exsultate” திருத்தூது அறிவுரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிடும் மூன்றாவது திருத்தூது அறிவுரையாகும். இதற்கு முன்னர், இன்றைய உலகில் நற்செய்தி அறிவிப்பது குறித்த Evangelii gaudium என்ற திருத்தூது அறிவுரையை, 2013ம் ஆண்டிலும், குடும்பம் குறித்த Amoris laetitia திருத்தூது அறிவுரையை, 2016ம் ஆண்டிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ளார். திருத்தூது அறிவுரை, திருத்தந்தையின் அதிகாரப்பூர்வ போதனையின் ஒரு வடிவமாக அமைந்துள்ளது.

திருஅவைக்கு, சூப்பர்ஹீரோக்கள் அல்ல, மாறாக புனிதர்கள் தேவைப்படுகின்றனர் என அடிக்கடி வலியுறுத்திக் கூறிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய பேதுருவின் தலைமைப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், பல தருணங்களில், அடிக்கடி திருஅவையில் புனிதத்தன்மை குறித்து பேசியுள்ளார். மேலும், புனிதராய் வாழ்வதைச் சுட்டிக்காட்டுவது எது, புனிதப் பாதையில் நடப்பதற்கு, திருஅவை அனைவருக்கும் வாய்ப்பை வழங்குகின்றது என்றவாரெல்லாம் திருத்தந்தை பேசியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.