2018-04-04 15:40:00

தொடர்ந்து நம்மை வழி நடத்திவரும் புனித 2ம் ஜான்பால்


ஏப்.04,2018. திருத்தந்தை புனித 2ம் ஜான்பால், இவ்வுலகைவிட்டுச் சென்று 13 ஆண்டுகள் கடந்திருந்தாலும், அவர் இன்னும் நம்முடன் தொடர்ந்து உரையாடி வருகிறார், நம்மை வழி நடத்தி வருகிறார் என்று போலந்து கர்தினால் Stanislaw Dziwisz அவர்கள் கூறினார்.

2005ம் ஆண்டு, ஏப்ரல் 2ம் தேதி இறையடி சேர்ந்த திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்களின் 13ம் ஆண்டு நிறைவையொட்டி, கிரக்கோவ் நகரில் அமைந்துள்ள இப்புனிதரின் திருத்தலத்தில் நினைவுத் திருப்பலியாற்றிய கர்தினால் Dziwisz அவர்கள் தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், தலைமைப்பணியாற்றிய வேளையில், அவரது தனிப்பட்ட செயலராகப் பணியாற்றிவந்த கர்தினால் Dziwisz அவர்கள், பணியாற்றவே தான் வந்ததாக புனித 2ம் ஜான்பால் அவர்கள் நமக்கு தொடர்ந்து நினைவுறுத்தி வருகிறார் என்று, தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

1978ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி தன் 58வது வயதில், திருஅவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 2ம் ஜான்பால் அவர்கள், 27 ஆண்டுகள் இத்தலைமைப்பணியில் பணிசெய்து, 2005ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி, இறை இரக்கத்தின் ஞாயிறுக்கு முந்திய நாள் இறையடி சேர்ந்தார்.

திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், 2011ம் ஆண்டு, மே 1ம் தேதி, இறை இரக்கத்தின் ஞாயிறன்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் அருளாளராகவும், 2014ம் ஆண்டு ஏப்ரல் 27, இறை இரக்கத்தின் ஞாயிறன்று, புனிதராகவும் உயர்த்தப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.