2018-04-03 15:53:00

ஒடிசா மாநிலத்தில் கத்தோலிக்க கோவில்களில் தாக்குதல்


ஏப்.03,2018. இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள இரண்டு பங்குதளக் கோவில்கள், சமூக விரோதிகளால் சேதமாக்கப்பட்டுள்ளன.

உயிர்ப்புப் பெருவிழாவான ஞாயிறன்று, Rourkela மறைமாவட்டத்திலுள்ள Bihabandh என்ற கிராமத்துக் கத்தோலிக்கக் கோவிலின் புனிதப் பொருள்கள் பாதுகாக்கப்பட்டிருந்த அறையை தீயிட்டுக் கொளுத்தியுள்ள சமூக விரோதிகள், அக்கிராமத்திற்கு அருகே உள்ள Salangabahal பங்குத்தளத்தின் வாயிலிலுள்ள மாதா சிலையையும், குழந்தை இயேசு சிலையையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

ஒரு சில கிலோ மீட்டர்கள் இடைவெளியில் அமைந்துள்ள இவ்விரு பங்கு கோவில்களையும் ஒரே குழு திட்டமிட்டு தாக்கியுள்ளது, அவர்கள் கொண்டுள்ள கிறிஸ்தவ விரோதப் போக்கைக் காண்பிக்கிறது என்று, Rourkela ஆயர், Kishor Kumar Kujur அவர்கள் கூறினார்.

ஒடிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்த கந்தமால் வன்முறைகள் இடம்பெற்ற 10ம் ஆண்டில் இத்தகையத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது கவலை தருவதாக உள்ளது என்று கூறிய கட்டக் புவனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா அவர்கள், மத சார்பற்ற ஒரு நாட்டில், அதுவும், கிறிஸ்தவர்களின் புனித நாளன்று, கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டிருப்பது, அதிர்ச்சியளிக்கிறது என்று கூறினார்.

இந்திய நாட்டின் பெருமைக்கு இழுக்கைத் தேடித்தரும் இத்தகைய வன்முறைகள் நிறுத்தப்பட அனைவரும் இணைந்து உழைக்கவேண்டும் என்ற அழைப்பையும், பேராயர் பார்வா அவர்கள் விடுத்தார். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.