மார்ச்,28,2018. "எவரொருவர், சிலுவையிலிருந்து விலகிச் செல்கிறாரோ, அவர், உயிர்ப்பிலிருந்தும் விலகிச் செல்கிறார்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, புனித வாரத்தின் புதன் கிழமையன்று வெளியாயின.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் பிற்பகலில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை, அவர் தங்கியிருக்கும் துறவு இல்லத்தில் சந்தித்து, உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டார் என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்தது.
முக்கியமான திருநாள்களையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முன்னாள் திருத்தந்தையை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்வதை தன் வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இச்செவ்வாய் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பீடச் செயலரின் அலுவலத்திற்குச் சென்று, அங்கு பணியாற்றுவோருக்கு உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, அந்த அலுவலகத்தில் புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் ஒரு பகுதியை அர்ச்சித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |