2018-03-27 16:26:00

வெனிசுவேலாவில், உணவின்றி, வாரத்திற்கு 5 குழந்தைகள் இறப்பு


மார்ச்,27, 2018  வெனெசுவெலா நாட்டில் பசியால் அவதியுறும் குழந்தைகள், சுரண்டலுக்கும் உரிமை மீறலுக்கும் நோய்களுக்கும் உள்ளாக்கப்படும் அபாயம் இருப்பதாக 'Save the Children' என்ற அமைப்பு கவலையை வெளியிட்டுள்ளது.

கொலம்பியா நாட்டிற்குள் தஞ்சம் புகுந்துள்ள வெனெசுவேலா குழந்தைகள், ஆயுதக்குழுக்களால் கடத்தப்பட்டு ஆயுதம் ஏந்த வைக்கும் அபாய நிலைகள் நிலவுவதாக உரைத்த இந்த அமைப்பு, வெனிசுவேலா நாட்டில் ஏறத்தாழ மூன்று இலட்சம் குழந்தைகள் போதிய சத்துணவின்றி உயிரிழக்கும் அபாயத்தை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கிறது.

வெனிசுவேலா நாட்டில், ஒவ்வொரு வாரமும், 5 முதல் 6 குழந்தைகள் போதிய சத்துணவின்மையால் உயிரிழக்கும் நிலையில், வெனிசுவேலாவிற்கும் கொலம்பியாவுக்கும் இடையிலுள்ள எல்லையில் குழந்தைகளின் நலன் பாதுக்கப்பட, சிறப்புக்கவனம் செலுத்தி வருகிறது Save the Children அமைப்பு.

வெனெசுவேலாவில், உணவு மற்றும் மருந்துக்கள் இன்மையாலும், வேலைவாய்ப்பின்மையாலும் மக்களில், ஏறத்தாழ 13 இலட்சம் பேர்  போதிய சத்துணவின்றி வாடும் நிலையில், கடந்த ஆண்டில் மட்டும், ஐந்து இலட்சம் பேர் தங்கள் நாட்டிலிருந்து கொலம்பியாவிற்குள் அடைக்கலம் தேடியுள்ளனர்.

உலகின் குழந்தைகளிடையே 1919ம் ஆண்டு முதல் சிறப்பு சேவையாற்றி வரும் Save the Children என்ற பன்னாட்டு அமைப்பு, தற்போது வெனிசுவேலா எல்லைகளில் குழந்தைகளுக்கு உதவி வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.