2018-03-22 14:14:00

ஒப்புரவு அருளடையாளம், உடைகளை துப்புரவு செய்வதுபோல் அல்ல


மார்ச்,22,2018. உடையில் படிந்த அழுக்கை நீக்குவதற்கு துப்புரவு செய்வோரிடம் உடைகளை அனுப்புவது போல, நம் பாவங்களை நீக்குவதற்கு, ஒப்புரவு அருளடையாளத்தை அணுகிச் செல்வது தவறு என்றும், இவ்வருள் அடையாளத்தில் இறைவனின் அன்பைச் சுவைக்க நாம் செல்லவேண்டும் என்றும் திருத்தந்தை இவ்வியாழன் காலை மறையுரையில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் தன் உடன்படிக்கையிலிருந்து என்றும் தவறுவதில்லை என்ற கருத்தை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.

ஒரு தாய், தன் குழந்தையை, உள்ளத்தின் ஆழத்திலிருந்து அன்புகூருவதுபோல், இறைவனின் அன்பு உள்ளது என்று கூறியத் திருத்தந்தை, அத்தகைய அன்பை முழுமையாக நம்பிய ஆபிரகாம், நமக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு என்று எடுத்துரைத்தார்.

அன்புத் தந்தையாம் இறைவன், நம்மை அணைக்கக் காத்திருப்பதே, ஒப்புரவு அருளடையாளத்தில் நாம் உணரவேண்டிய அனுபவம் என்றும், புனித வாரத்தைத் துவங்கும் வேளையில், இத்தகைய இறைவனை அணுகிச் செல்வோம் என்றும், தன் மறையுரையின் இறுதியில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.