2018-03-22 14:22:00

உலக தண்ணீர் நாள் - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி


மார்ச்,22,2018. மார்ச் 22, இவ்வியாழனன்று, உலக தண்ணீர் நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, உலக வளங்களை, குறிப்பாக தண்ணீரைப் பேணிப் பாதுகாப்பதை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

"பூமிக்கோளத்தை பாதுகாப்பதும், தண்ணீரைச் சேமித்து வைப்பதும் உயிரைப் பாதுகாப்பதாகும்" என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாக திருத்தந்தை வெளியிட்டுள்ளார்.

படைப்பின் மீது தான் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தும் வகையில், 2015ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலின் துணைத் தலைப்பாக, "நமது பொதுவான இல்லத்தைப் பேணுதல்" என்ற சொற்களை அவர் தெரிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

@pontifex என்ற முகவரியுடன் மார்ச் 22, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1497 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 72 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.