2018-03-21 16:26:00

திருத்தந்தையை வாழ்த்திய இத்தாலிய அரசுத்தலைவர்


மார்ச்,21,2018. உலகின் மேய்ப்பர் என்ற பொறுப்பை தாங்கள் ஏற்ற ஐந்தாம் ஆண்டு நிறைவையொட்டி, இத்தாலிய மக்கள் சார்பாகவும், குறிப்பாக, இத்தாலிய அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் சார்பாகவும் என் உண்மையான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று இத்தாலிய அரசுத்தலைவர், செர்ஜியோ மாத்தரெல்லா (Sergio Mattarella) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

2013ம் ஆண்டு மார்ச் 19, புனித யோசேப்பு திருநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கத்தோலிக்கத் திருஅவையின் தலைவராகப் பணியேற்ற நாளின் ஐந்தாம் ஆண்டு நிறைவு இத்திங்களன்று நடைபெற்றதையொட்டி, அரசுத்தலைவர் மாத்தரெல்லா அவர்கள் இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

வலுவற்ற மக்கள் மீது தனி அக்கறை கொண்டவர் என்பதை எளிதில் அறிந்துகொள்ளுமாறு, ஆப்ரிக்கா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய கண்டங்களில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்கள் விளங்குகின்றன என்று, அரசுத்தலைவர் மாத்தரெல்லா அவர்கள், தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கத்தோலிக்க சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல், உலகச் சமுதாயத்திற்கும் திருத்தந்தை ஆற்றிவரும் பணிகளுக்காக அவருக்கு நன்றி கூறிய மாத்தரெல்லா அவர்கள், இறைவன், திருத்தந்தைக்கு நல்ல உடல் நலத்தை வழங்கவேண்டும் என்று தான் வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.