2018-03-21 16:08:00

சமூகத் தொடர்புத் துறையின் தலைவர் பணி விலகல்


மார்ச்,21,2018. திருப்பீடத்தின் சமூகத் தொடர்புத் துறையின் தலைவராக கடந்த 3 ஆண்டுகள் பணியாற்றிவந்த அருள்பணி Dario Edoardo Viganò அவர்கள், தன் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அளித்த விண்ணப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று ஏற்றுக்கொண்டார்.

திருப்பீடத்திலும், வத்திக்கானிலும் நிகழ்ந்துவரும் சீர்திருத்தங்களின் ஒரு முக்கியப் பகுதியாக, திருப்பீடத்தின் சமூகத் தொடர்புத் துறையின் பல்வேறு அங்கங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை, 2015ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் திறம்பட செய்துவந்த அருள்பணி விகனோ அவர்களுக்கு திருத்தந்தை தன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

அருள்பணி விகனோ அவர்களுக்கு விருப்பமிருந்தால் அத்துறையில் அவர் தொடர்ந்து ஆலோசகராகப் பணியாற்றுமாறு திருத்தந்தை அவரைக் கேட்டுக்கொண்டார்.

அருள்பணி விகனோ அவர்கள், மார்ச் 19, இத்திங்களன்று திருத்தந்தைக்கு எழுதியுள்ள மடலில், 2015ம் ஆண்டு முதல், திருத்தந்தை தனக்கு உறுதுணையாக, வழிகாட்டியாக இருந்ததற்கு, தன் நன்றியைத் தெரித்துள்ளார்.

திருப்பீடத்தின் சமூகத் தொடர்புத் துறையின் செயலராகப் பணியாற்றிவரும் அருள்பணி Lucio Adrián Ruiz அவர்களை, இத்துறையின் பொறுப்பாளராக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பாளர் Greg Burke அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.