2018-03-13 15:14:00

திருத்தந்தை பிரான்சிஸ் தலைமைப்பணி, 5ம் ஆண்டு நிறைவு


மார்ச்,13,2018. “இயேசு நம் வாழ்வில் நுழைவதற்கு அனுமதித்தால், நம் ஆன்மீக வாழ்வின் சுடரைத் தொடர்ந்து எரிய வைப்பதன் இரகசியத்தை, நாம் கண்டுகொள்வோம்” என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில், இச்செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேதுருவின் 265வது வழித்தோன்றலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு நிறைவு, மார்ச் 13, இச்செவ்வாய்க்கிழமையன்று சிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வை முன்னிட்டு, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் ஆசிரிய வெளியீடுகள் பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார்.   

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் அவரின் பணி, திருஅவைக்கும், மனித சமுதாயத்திற்கும், எப்போதும் ஒரு கொடையாக உள்ளன என்றும், அவரின் ஆன்மீக மற்றும் திருஅவைப் பணிகள், விசுவாசம் மற்றும், இறைபராமரிப்புச் செயலின் ஒளியில், நோக்கப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டு, வாசிக்கப்பட வேண்டும் என்று கூறினார், கர்தினால் பரோலின்.  

Evangelii gaudium, Amoris laetitia, Laudato sì ', இன்னும், இரக்கம் பற்றிய திருத்தந்தையின் எண்ணங்கள் பற்றிக் கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், திருஅவை, நற்செய்தியை அனைத்து படைப்புயிர்களுக்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என திருத்தந்தை வலியுறுத்துவதையும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வையொட்டி, "திருத்தந்தை பிரான்சிஸ், சொல்வதைச் செய்பவர் (Pope Francis - A Man of His Word)" என்ற தலைப்பில், Wim Wenders அவர்கள் தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முன்னோட்டம் (trailer) வத்திக்கான் செய்திகளுக்கென திரையிடப்பட்டது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரை 4 கோடியே 60 இலட்சத்திற்கு மேற்பட்டோர் பின்பற்றும்வேளை, அவரின் இன்ஸ்டகிராமை, 50 இலட்சத்திற்கு அதிகமானோர் பார்வையிடுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், விசுவாசம் பற்றிய Lumen fidei, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிப்பது பற்றிய Laudato si ' ஆகிய இரு திருமடல்களையும், Evangelii gaudium, Amoris laetitia ஆகிய இரு திருத்தூது அறிவுரைகளையும், தன் சொந்த விருப்பத்தின் பேரில் வெளியிடப்படும் 23 Motu proprio கடிதங்களையும் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டு, குடும்பம் பற்றிய இரு ஆயர் மாமன்றங்கள், 22 வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணங்கள், 17 இத்தாலிய மேய்ப்புப்பணி பயணங்கள் போன்றவற்றையும் நடத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.