2018-03-09 14:53:00

இலங்கையில் ஒழுங்குமுறை காக்கப்படுமாறு கிறிஸ்தவர்கள்...


மார்ச்,09,2018. இலங்கை, புதியதோர் உள்நாட்டுப் போருக்குச் செல்லும் ஆபத்தை எதிர்கொள்ளும் இவ்வேளையில், நாட்டில், சட்டம் ஒழுங்குமுறைகளை, எவ்வளவு விரைவில் கொண்டுவர இயலுமோ, அவ்வளவு விரைவில் கொண்டுவருமாறு, அந்நாட்டின் பல்வேறு மனித உரிமை குழுக்களும், கிறிஸ்தவ கழகங்களும், இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளன.

சிங்கள புத்தமதத்தவர் ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து, பழிவாங்கும் நடவடிக்கையாக, கண்டியில் முஸ்லிம் கடைகளும், வீடுகளும் தீயிட்டு கொளுத்தப்பட்ட இன வன்முறைக்குப் பின்னர், அந்நாடு, புதியதோர் உள்நாட்டுப் போரின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது எனவும், கிறிஸ்தவ கழகங்கள் எச்சரித்துள்ளன.

மேலும், இவ்வன்முறையைத் தொடர்ந்து, அறிக்கை வெளியிட்டுள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர்கள், கடும் மோதல்களை மேலும் தவிர்க்கும்பொருட்டு, உரையாடல் மற்றும் புரிந்துணர்வில், அனைத்து அரசியல் மற்றும் பொது மக்கள் தலைவர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்த வன்முறைச் செய்திகள் மேலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்தில், மார்ச் 07, இப்புதனன்று இலங்கை அரசு, இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களைத் தடைசெய்துள்ளது. அத்துடன், பத்து நாள் அவசரகால நிலையையும் அறிவித்துள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.