2018-02-16 15:17:00

திருத்தந்தை : உண்மையான நோன்பு பிறருக்கு உதவுவதாகும்


பிப்.16,2018. உண்மையான உண்ணா நோன்பு, பிறருக்கு உதவும் நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டுமென்று கூறிய அதேவேளை, மற்றவரை இழிவாகக் கருதும் போலித்தனமான நோன்பு குறித்து எச்சரித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், இவ்வெள்ளிக்கிழமை காலையில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இத்திருப்பலியின் முதல் வாசகத்தை (எசா.58.1-9a) மையப்படுத்தி மறையுரையாற்றினார்.

கொடுமைத்தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும், உண்மையான நோன்பு என்று ஆண்டவர் சொல்வதை மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, தவக்காலக் கடமைகளில் நோன்பு இருப்பதும் ஒன்று என்று கூறினார்.

தபம் செய்கின்றோம், நோன்பைக் கடைப்பிடிக்கின்றோம் என்பதை வெளிப்படையாய்க் காட்டிக்கொள்ளமால், பிறருக்கு உதவும் நோக்கத்தில், எப்போதும் புன்னகையுடன் நோன்பிருக்குமாறு கூறியத் திருத்தந்தை, நோன்பு இருப்பது என்பது, ஒருவர் தன்னையே தாழ்த்திக்கொள்வதாகும், அதாவது, ஒருவர் தன் பாவங்களை நினைத்து, வருந்தி, ஆண்டவரிடம் மன்னிப்புக் கேட்பதாகும் என்றும் கூறினார்.

இத்திருப்பலியின் முதல் வாசகத்தில் சொல்லப்பட்டுள்ளது போன்று, நோன்பு இருப்பது என்பது, ஏழைகள் மற்றும் பசித்தோர்க்கு உணவைப் பகிர்ந்து கொடுப்பதாகும், தங்க இடமில்லா வறியோரை, தங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதாகும், உடையற்றோருக்கு உடை கொடுப்பதாகும் என்று மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.         

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.