2018-02-14 16:41:00

வெள்ளித்திரை, நற்செய்தியை அறிவிக்கும் சிறந்த கருவி


பிப்.14,2018. மனித வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்தின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வெள்ளித்திரை, கனவுகளின் தொழிற்சாலையாக மட்டுமல்ல, நற்செய்தியை அறிவிப்பதற்கும் சிறந்ததொரு கருவியாக அமைகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றினார்.

திரைப்படங்களை மையப்படுத்தி, மெக்சிகோ நாட்டின் Monterrey பல்கலைக் கழகத்தில், பிப்ரவரி 13, இச்செவ்வாயன்று துவங்கிய ஒரு கருத்தரங்கில், திருப்பீட தொடர்புத் துறையின் தலைவர், அருள்பணி தாரியோ ஏதுவார்தோ விகனோ (Dario Edoardo Viganò) அவர்கள், தன் முதல் உரையில் இவ்வாறு கூறினார்.

"காணக்கூடிய ஊடகத்தின் மடிப்புக்களில் கடவுளைத் தேடுதல்" என்ற தலைப்பில் தன் உரையை வழங்கிய அருள்பணி விகனோ அவர்கள், Franco Zeffirelli அவர்கள் உருவாக்கிய 'நாசரேத்தின் இயேசு' என்ற திரைப்படத்தையும், Pier Paolo Pasolini அவர்கள் உருவாக்கிய 'மத்தேயுவின் நற்செய்தி' என்ற திரைப்படத்தையும் ஒப்புமைப்படுத்தி கருத்துக்களை வழங்கினார்.

Monterrey பல்கலைக் கழகத்தில் இயங்கிவரும் புனிதக் கலைத்துறையின் 20ம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் இக்கருத்தரங்கில், அருள்பணி விகனோ அவர்கள் மூன்று உரைகள் வழங்கவிருக்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.