2018-02-13 15:44:00

லூர்து நகரில் ஒரு புதுமை அதிகாரப்பூர்வ அங்கீகாரம்


பிப்.13,2018. பிரான்ஸ் நாட்டின் லூர்து நகர் அன்னை மரியா திருத்தலத்தில், இவ்வாரத்தில் ஒரு புதுமை, கத்தோலிக்கத் திருஅவையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

லூர்து அன்னை விழாவும், உலக நோயாளர் நாளுமான, பிப்ரவரி 11, இஞ்ஞாயிறன்று, பிரான்ஸ் நாட்டின் Beauvais ஆயர் Jacques Benoit-Gonin அவர்கள், அந்தப் புதுமையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பிரான்ஸ் நாட்டு அருள்சகோதரி Bernadette Moriau அவர்களுக்கு, முதுகுத்தண்டுவடத்தில்  ஏற்பட்ட பிரச்சனையால், 1980ம் ஆண்டிலிருந்து மாற்றுத்திறனாளியாக சக்கர நாற்காலியில் வாழ்வைச் செலவழித்து வந்தார். இவர் 2008ம் ஆண்டில் தூர்து நகருக்குத் திருப்பயணம் மேற்கொண்டவேளையில், திருத்தலத்தில் நோயாளர்களை ஆசிர்வதித்த வழிபாட்டில் கலந்துகொண்டார். அதற்குப்பின் இவர் தனது உடலில் ஏதோ மாற்றம் நிகழ்வதை உணர்ந்தார். உடம்பு முழுவதும் நலமடைவதாகவும், உடலில் ஒருவித வெப்பத்தையும் இவர் உணர்ந்தார். அறைக்குச் சென்றபின், உனது கட்டுக்களை அவிழ் என்ற குரலை, தான் கேட்டதாகவும், சக்கர நாற்காலியின்றி தன்னால் நடக்க முடிந்ததாகவும் 79 வயது நிரம்பிய அச்சகோதரி கூறியுள்ளார்.

பின்னர் லூர்து நகரிலுள்ள பன்னாட்டு மருத்துவக் குழுவிடம் இச்சகோதரி அழைத்துச் செல்லப்பட்டார். இச்சகோதரி குணமானது, உண்மையிலேயே புதுமை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் புதுமை, லூர்து நகரில், அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட எழுபதாவது புதுமையாகும். லூர்து அன்னை மரியிடம் செபித்ததால், ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட புதுமைகள் நடந்துள்ளன. ஆயினும் கத்தோலிக்கத் திருஅவை, எழுபது புதுமைகளையே இதுவரை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.

ஆதாரம் : CNA/EWTN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.