2018-02-07 15:28:00

மத உணர்வு கொண்டோருக்கு கனடாவில் பெரும் சோதனை


பிப்.07,2018. மத உரிமைகளையும், மனசாட்சியின் சுதந்திரத்தையும் பாதிக்கும் வகையில் கனடா அரசு வகுத்துள்ள சட்டங்களை ஏற்றுக்கொள்வதாகக் கையெழுத்திட மறுப்போரை, அரசு வற்புறுத்தி வருவதை, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் கடுமையாகக் கண்டனம் செய்துள்ளனர்.

கருக்கலைப்பை முழுமையாக அமல்படுத்த விழையும் சட்டத்தை உள்ளடக்கிய ஓர் அரசாணையை, மனசாட்சியின் அடிப்படையில் எதிர்த்து வருவோர், அந்தத் அரசாணையை ஏற்றுக்கொள்வதாக பிப்ரவரி 9ம் தேதிக்குள் கையொப்பம் அளிக்கவில்லையெனில், அரசு வழங்கும் பல சலுகைகள் அவர்களுக்கு கிடைக்காது என்று கூறப்பட்டிருப்பதை, ஆயர்களும், ஏனைய மதத் தலைவர்களும் எதிர்த்து வருகின்றனர்.

இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய டொரான்டோ பேராயர், கர்தினால் தாமஸ் கோலின்ஸ் (Thomas Collins) அவர்கள், அரசு தற்போது உருவாக்கியுள்ள இச்சூழல், மத உணர்வு கொண்ட அனைவருக்கும் ஒரு பெரும் சோதனை என்று குறிப்பிட்டார்.

கோடை விடுமுறையில் வழங்கப்படும் பகுதி நேர வேலைகளில் பணியாற்ற விழையும் இளையோர், இந்த அரசாணையை ஏற்றுக்கொள்வதாக பிப்ரவரி 9ம் தேதிக்குள் கையொப்பம் இடவேண்டும் என்பதில் தற்போதைய போராட்டம் துவங்கியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.