2018-02-06 16:44:00

மத்தியத் தரைக்கடல் பகுதி பிரச்சனைகளுக்குத் தீர்வு காண...


பிப்.06,2018. மத்தியத் தரைக்கடல் பகுதியின் அண்மைக்காலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, இத்தாலிய ஆயர்கள் முன்மொழிந்துள்ள பரிந்துரைகளை தாங்கள் ஏற்பதாக, மால்ட்டா ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

புலம்பெயரும் வறியோர், மத்தியத் தரைக்கடலில் உயிரிழந்து, அங்கேயே சமாதியாவதைத் தடுக்கும் நோக்கத்தில், இப்பிரச்சனைகளுக்கு ஆன்மீக, மற்றும் ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய அமைதிக்கூட்டம் தேவைப்படுகிறது என்ற கருத்தை, மால்ட்டா ஆயர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

புலம்பெயர்வோருக்கென பல்வேறு வாக்குறுதிகளை ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் வழங்கியுள்ள போதிலும், அவற்றைச் செயலாக்கும் அரசியல் ஆர்வமோ, விருப்பமோ இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறும் மால்ட்டா ஆயர்கள், மக்களிடையிலும், கலாச்சாரங்களிடையிலும் பரிமாற்றங்களையும், வறியோர் மீது பரிவையும் தூண்டுவதன் வழியே, இப்பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண முடியும் என்று, இத்தாலிய ஆயர்கள் விடுத்துள்ள பரிந்துரை உயர்வானது என்று தெரிவித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.