2018-01-27 15:13:00

தென் கொரிய மருத்துவமனை தீ விபத்தில் இறந்தவர்களுக்கு செபம்


சன.27,2018. தென் கொரியாவில் மருத்துவமனை ஒன்றில் இவ்வெள்ளியன்று இடம்பெற்ற தீ விபத்தில், இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு, தனது செபங்களையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவசரகால உதவிபுரிகின்ற மற்றும் மீட்புப்பணியாற்றுகின்ற எல்லாருக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தன் ஊக்கத்தையும் செபங்களையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் செபங்கள் மற்றும் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் இச்செய்தியை, திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், தென் கொரியாவுக்கு அனுப்பியுள்ளார்.  

தென் கொரியாவின் மிரியாங் நகரின் செஜோங் மருத்துவமனையில், சனவரி 26, இவ்வெள்ளி காலை 7.30 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 37 பேர் இறந்துள்ளனர் மற்றும், எழுபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்து, அந்நாட்டில், ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்குப்பின் நடந்த கோர விபத்து என்று செய்திகள் தெரிவிக்கின்றன.  

2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இம்மருத்துவமனை, வயதானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பான கவனம் செலுத்தி வருகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.