2018-01-12 14:44:00

சாகர், இடுக்கி சீரோ-மலபார் மறைமாவட்டங்களுக்கு புதிய ஆயர்கள்


சன.12,2018. இந்தியாவின் சாகர் சீரோ-மலபார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி ஜேம்ஸ் அத்திக்கலாம் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று நியமித்துள்ளார்.

சாகர் சீரோ-மலபார் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய அந்தோனி சிரியாத் அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, அம்மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயரை நியமித்துள்ளார்.

போபாலில், நிர்மல் ஜோதி மனநல மையத்தின் இயக்குனராகப் பணியாற்றிவந்த, புதிய ஆயர், ஜேம்ஸ் அத்திக்கலாம் அவர்கள், 1958ம் ஆண்டு, கேரளாவின் சங்கனாச்சேரி மறைமாவட்டத்தைச் சார்ந்த புலின்குன்னு என்ற ஊரில் பிறந்தவர். இவர், உரோம் அகுஸ்தீனியானம் பல்கலைக்கழகத்தில் திருஅவைத்தந்தையர் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர்.

மேலும், இந்தியாவின் இடுக்கி சீரோ-மலபார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி ஜான் நெல்லிக்குன்னல் அவர்கள்,  இவ்வெள்ளியன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவின் மங்களப்புழா புனித யோசேப்பு பாப்பிறை குருத்துவக் கல்லூரியில், மெய்யியல் துறைக்குத் தலைவராகப் பணியாற்றிவரும் புதிய ஆயர், அருள்பணி ஜான் நெல்லிக்குன்னல் அவர்கள், பாளை மறைமாவட்டத்தின், கடப்பிளாமாட்டம் என்ற ஊரில், 1973ம் ஆண்டு பிறந்தவர். உரோம் ஆஞ்சலிக்கம் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்றிருப்பவர், புதிய ஆயர், அருள்பணி ஜான் நெல்லிக்குன்னல்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.