2018-01-09 15:17:00

அமெரிக்க ஐக்கிய நாட்டில் தேசிய புலம்பெயர்ந்தோர் வாரம்


சன.09,2018. அமெரிக்க ஐக்கிய நாட்டில் சனவரி 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை கடைப்பிடிக்கப்பட்டுவரும் தேசிய புலம்பெயர்ந்தோர் வாரத்திற்கென செய்தி வெளியிட்டுள்ளார், அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் டானியேல் தினார்தோ.

புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் எனும் கொடைக்காக, அமெரிக்கர்கள் சிறப்பாக நன்றிகூர வேண்டும் என்று கூறியுள்ள கர்தினால் தினார்தோ அவர்கள், புலம்பெயர்ந்த திருஅவை மற்றும் நாடு என்ற முறையில், அமெரிக்க ஐக்கிய நாடு, தன் வரலாற்றில், ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக, இந்த வாரத்தைக் கடைப்பிடித்து வருகின்றது என்று கூறியுள்ளார்.

இந்த ஐம்பது ஆண்டுகளில், அமெரிக்க ஐக்கிய நாட்டில் புலம்பெயர்ந்தோரின் முகம், ஐரோப்பிய, ஆசிய, தென் அமெரிக்க போன்ற முகங்களாக மாறியுள்ளது என்றும், அவர்களின் திறமைகள், அமெரிக்காவுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் ஆசீர்வாதங்களாக நோக்கப்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார், கர்தினால் தினார்தோ.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 51வது உலக அமைதி நாளுக்கென வெளியிட்ட புலம்பெயர்ந்தோர் குறித்த செய்தியையும் சுட்டிக்காட்டியுள்ளார், கர்தினால் தினார்தோ.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஏறத்தாழ எழுபது இலட்சம் பேர், சட்டத்திற்குப் புறம்பே வேலை செய்கின்றனர். இவர்கள், சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளைக்குச் செலுத்தும் பணம், ஆண்டுக்கு 120 கோடி டாலராகும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.