இளைஞர் ஒருவர் நண்பரிடம் புதிர் ஒன்றைத் தொடுத்தார். "ஒரு குளத்தின் கரையில் மூன்று தவளைகள் அமர்ந்திருந்தன. அவற்றில் ஒன்று குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. மீதி எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?" என்று கேட்டார். "இது என்ன பெரிய புதிர்... மீதி இரண்டு தவளைகள் இருக்கும்" என்று பெருமையாகச் சொன்னார் நண்பர்.
"நண்பா, கேள்வியைச் சரியாகப் புரிந்துகொண்டு பதில் சொல். மூன்று தவளைகளில் ஒன்று குளத்தில் குதிக்கத் தீர்மானித்தது. மீதி எத்தனை தவளைகள் கரையில் இருக்கும்?" என்று கேள்வியை மீண்டும் சொன்னார் இளைஞர்.
நண்பர் எதையோப் புரிந்துகொண்டவர்போல், "ஓ, புரிகிறது... கரையில் ஒன்றும் மீதி இருக்காது. ஒரு தவளை குதித்ததும், மற்ற தவளைகளும் குளத்திற்குள் குதித்துவிடும்" என்று சொன்னார். அவரது அறிவுத் திறனை அவரே மெச்சிக் கொண்டதைப்போல், புன்னகை பூத்தார்.
இளைஞர் தலையில் அடித்துக்கொண்டு, சலிப்புடன் விளக்கினார்: "நண்பா, மீண்டும் தவறாகச் சொல்கிறாய். மூன்று தவளைகளும் கரையில்தான் இருக்கும். அவற்றில் ஒன்று குளத்திற்குள் குதிக்கத் தீர்மானம் செய்ததே ஒழிய, இன்னும் குதிக்கவில்லை" என்று விளக்கம் கொடுத்தார். நண்பரின் முகத்தில் அசடு வழிந்தது.
புத்தாண்டு நாளன்று இளையோர் பலர் இவ்வாண்டு செய்து முடிக்க வேண்டிய பல தீர்மானங்களை, திட்டங்களை மனதில் எண்ணியிருப்பர். தீர்மானங்களும், திட்டங்களும் மனதளவில் நின்றுவிடாமல், செயல் வடிவம் பெறவேண்டும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |