2018-01-04 15:53:00

தமிழக பழங்குடி மாணவருக்கு இளம் அறிவியலாளர் விருது


சன.04,2018. இந்திய தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் அறிவியலாளர் விருது கிடைத்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, டிசம்பர் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடத்திய 25வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் இவ்விருதைப் பெற்றுள்ளார், 12 வயது நிரம்பிய சின்னக்கண்ணன்.

இம்மாநாட்டில் 30 மாநிலங்களில் இருந்தும், 6 ஆசிய நாடுகளில் இருந்தும் இளம் விஞ்ஞானிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து முப்பது ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில், 2 கட்டுரைகள் மட்டும் மாநாட்டுக்குத் தேர்வு செய்யப்பட்டன.

இதில், ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதி குழந்தைத் தொழிலாளர் சிறப்புப்பள்ளி மாணவர்களின், “மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு”என்ற தலைப்பிலான ஆய்வுக்கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது. கொங்காடை குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவரும், ஆய்வுக்குழுத் தலைவருமான, எம்.சின்னக்கண்ணன் இந்த மாநாட்டில் பங்கேற்று, ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து, இளம் அறிவியலாளர் பட்டத்தையும், பரிசையும் வென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் மணிப்பூரில் நடைபெற உள்ள இந்திய அறிவியல் மாநாட்டுக்கும் இந்த ஆய்வுக் கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தனது கிராம மக்கள் ஓர் ஆண்டுக்கு ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்வதைக் கண்டறிந்து சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைக்காக மத்திய அரசின் இளம் அறிவியலாளர் விருதைப் பெற்றுள்ளார், சின்னக்கண்ணன். 

ஆதாரம் : Agencies /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.