2017-12-28 15:33:00

குழந்தைகளுக்காகச் செபிக்க திருத்தந்தை அழைப்பு


டிச.28,2017. டிசம்பர் 28, இவ்வியாழனன்று கொண்டாடப்பட்ட மாசற்ற குழந்தைகளின் திருநாளையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தி, குழந்தைகளுக்காகச் செபிக்கும்படி அழைப்பு விடுத்தது.

"பிறப்பதற்கு அனுமதிக்கப்படாத, பசியில் அழுதுகொண்டிருக்கும், விளையாட்டுப் பொம்மைகளுக்குப் பதில், ஆயுதங்களைக் கைகளில் ஏந்தியிருக்கும் அனைத்துக் குழந்தைகளுக்காக இன்று நாம் செபிக்கிறோம்" என்ற சொற்களை, திருத்தந்தை அவர்கள் தன் டுவிட்டர் செய்தியாக பதிவு செய்தார்.

@pontifex என்ற முகவரியுடன், திருத்தந்தை வெளியிட்டு வரும் டுவிட்டர் செய்திகள், ஒவ்வொரு நாளும், இத்தாலியம், ஆங்கிலம், இஸ்பானியம், ஜெர்மானியம், போர்த்துகீசியம், பிரெஞ்சு, போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

டிசம்பர் 28ம் தேதி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1410 என்பதும், அவரது டுவிட்டர் செய்திகளை, ஆங்கிலத்தில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை, 15.906.148 என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.