2017-12-28 14:58:00

2017ம் ஆண்டில் திருத்தந்தை கலந்துகொண்ட நிகழ்வுகளின் தொகுப்பு


டிச.28,2017. 2017ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொண்ட நிகழ்வுகளின் தொகுப்பை, வத்திக்கான் தொடர்புத்துறை இவ்வியாழனன்று வெளியிட்டது. இத்தொகுப்பின் ஒரு சில முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:

இத்தாலியின் உம்பிரியா-லாட்சியோ பகுதிகளில் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோரில், 7000த்திற்கும் அதிகமானோரை, இவ்வாண்டு சனவரி 4ம் தேதி, வத்திக்கானில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 25ம் தேதி, மிலான் உயர்மறைமாவட்டத்தில் ஒருநாள் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 16ம் தேதி, உயிர்ப்புப் பெருவிழாவன்று தன் 90வது வயதை நிறைவு செய்த முன்னாள் திருத்தந்தை, 16ம் பெனடிக்ட் அவர்களுக்கு, சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஏப்ரல் 28, 29 தேதிகளில் எகிப்திற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 12,13 ஆகிய இரு தேதிகளில், பாத்திமா திருத்தலத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட வேளையில், ஜெசிந்தா, பிரான்செஸ்க்கோ ஆகிய இரு சிறார் அருளாளர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.

ஜூன் மாதம் 28ம் தேதி, மாலி, லாவோஸ், சுவீடன் ஆகிய நாடுகளில் முதன்முறையாக கர்தினால்களை உருவாக்கிய திருத்தந்தை, செப்டம்பர் 6ம் தேதி முதல், 11ம் தேதி முடிய கொலம்பியா நாட்டில் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டார்.

மியான்மார், பங்களாதேஷ் ஆகிய இரு ஆசிய நாடுகளில், நவம்பர் 26ம் தேதி முதல், டிசம்பர் 2ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம், இவ்வாண்டின் இறுதி வெளிநாட்டுப் பயணமாக அமைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.