2017-12-27 15:47:00

கிறிஸ்மஸ் விழாவையொட்டி, தாக்குதல் நிறுத்த அறிவிப்பு


டிச.27,2017. கிறிஸ்மஸ் விழாவையொட்டி, பிலிப்பீன்ஸ் அரசு தன் தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதாக விடுத்துள்ள அறிவிப்பைத் தொடர்ந்து, அந்நாட்டின் புதிய மக்கள் இராணுவம் என்றழைக்கப்படும் போராட்டக் குழுவும், தங்கள் தாக்குதல்களை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

இந்த அமைதி ஒப்பந்தம், டிசம்பர் 23 முதல் 26 முடியவும், அதேபோல், டிசம்பர் 30 முதல் சனவரி 2ம் தேதி முடியவும் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசும், போராட்டக் குழுவும், அறிவித்துள்ள அமைதி அறிக்கைகளை, பிலிப்பீன்ஸ் ஆயர்கள் பெரிதும் வரவேற்றுள்ள அதே வேளையில், இத்தகைய முயற்சிகள், உரையாடலுக்கு வழிவகுத்தால், நாட்டின் நலனுக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதாக இரு தரப்பினரும் அறிவித்துள்ளது, கிறிஸ்மஸ் காலத்தில் மக்களுக்குக் கிடைத்த பெரும் பரிசு என்று, பலங்கா மறைமாவட்ட ஆயர் ருபெர்தோ சான்தோஸ் அவர்கள் UCAN செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.