2017-12-23 14:17:00

ஒரு தந்தை, தன் பிள்ளைகளுக்கு ஆற்றும் உரை போன்று இருந்தது


டிச.23,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டுவரும் திருப்பீட சீர்திருத்தப் பணியில், தன் இலக்கை நோக்கிச் செல்வதில் தெளிவாக இருக்கின்றார் என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.

உரோமன் கூரியா எனப்படும் திருப்பீடத் தலைமையகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன், இவ்வியாழன் காலையில், கிறிஸ்மஸ் வாழ்த்தைப் பகிர்ந்துகொண்டு, திருத்தந்தை ஆற்றிய உரை குறித்து ஆன்சா செய்திக்குப் பேட்டியளித்த கர்தினால் பரோலின் அவர்கள், இச்சீர்திருத்தப் பணிக்கு, இயல்பாகவே பொறுமை அதிகம் தேவைப்படுகின்றது என்று தெரிவித்தார். 

திருப்பீட தலைமையகம், திருத்தந்தைக்கும், உலகளாவியத் திருஅவைக்கும் பணியாற்றுவதில், உண்மையிலேயே ஒரு சாட்சியாகத் திகழ்கின்றது என்ற உணர்வு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு உள்ளது என்றுரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தை கூறிய வார்த்தைகளை நேர்மறை உணர்வோடு தான் எடுத்துக்கொள்வதாகக் கூறினார்.

மேலும், திருப்பீடத் தலைமையக அதிகாரிகளுக்கு, திருத்தந்தை ஆற்றிய உரை பற்றி வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த, வத்திக்கான் நாட்டிற்குத் திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பணியாற்றும், கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்த்ரி அவர்கள், ஒரு தந்தை, தன் பிள்ளைகளுக்கு ஆற்றும் உரை போன்று, திறந்த மனதுடன் இருந்தது என்று கூறினார்.

வத்திக்கானில், திருத்தந்தையின் போதனைகளின்படி, கிறிஸ்மஸைக் கொண்டாடுவதற்கு முயற்சித்து வருவதாகவும், கர்தினால் கொமாஸ்த்ரி அவர்கள் தெரிவித்தார்.

ஆதாரம் : ANSA/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.