2017-11-25 15:22:00

திருத்தூதுப் பயணம் கத்தோலிக்க சமூகங்களை ஊக்கப்படுத்த...


நவ.25,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மியான்மார், பங்களாதேஷ் நாடுகளுக்கான திருத்தூதுப் பயணம், அந்நாடுகளிலுள்ள சிறுபான்மை கத்தோலிக்க சமூகங்களை  ஊக்கப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தெரிவித்தார்.

திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த கர்தினால் பரோலின் அவர்கள், 5 கோடியே 30 இலட்சம் மக்கள் வாழ்கின்ற மியான்மாரில் ஏழு இலட்சம் கத்தோலிக்கரும், 16 கோடியே 30 இலட்சம் மக்கள் வாழ்கின்ற  பங்களாதேஷில், நான்கு இலட்சம் கத்தோலிக்கரும் உள்ளனர் என்று கூறினார்.

இந்தச் சிறுபான்மை சமூகங்களுக்கு, உலகளாவியத் திருஅவை மேய்ப்பரின் நெருங்கிய உறவும், ஊக்கமும் தேவைப்படுகின்றது என்றும், ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், பொதுநிலையினர், இளையோர் ஆகியோரை, திருத்தந்தை சந்திப்பார் என்றும் கூறினார், கர்தினால் பரோலின்.

மேலும், இத்திருத்தூதுப் பயணம், உரையாடல் வழியாக, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் என்று, பங்களாதேஷ் கர்தினால் பாட்ரிக் டி ரொசாரியோ அவர்கள் கூறினார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.